சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   ஆண்டாள்  
நாச்சியார் திருமொழி  

Songs from 504.0 to 646.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    Previous   1  2  3  4  5  6  7    8  Next
கார்த் தண் முகிலும் கருவிளையும்
      காயா மலரும் கமலப் பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு
      இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து
      வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்
      பத்தவிலோசனத்து உய்த்திடுமின்



[622.0]
வண்ணம்-திரிவும் மனம்-குழைவும்
      மானம் இலாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையும் உள்மெலிவும்
      ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு
      சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண் அழியப் பலதேவன் வென்ற
      பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்



[623.0]
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
      காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை யாப்பும் உண்டான்
      பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ?
கற்றன பேசி வசவு உணாதே
      காலிகள் உய்ய மழை தடுத்துக்
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற
      கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்



[624.0]
கூட்டில் இருந்து கிளி எப்போதும்
      கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
      உலகு-அளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள்
      நன்மை இழந்து தலையிடாதே
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
      துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்.



[625.0]
Back to Top
மன்னு மதுரை தொடக்கமாக
      வண் துவராபதிதன் அளவும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்
      தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும்
      புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை
      ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே.



[626.0]
கண்ணன் என்னும் கருந்தெய்வம்
      காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்
      புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத
      பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
      வாட்டம் தணிய வீசீரே



[627.0]
பால்-ஆலிலையில் துயில் கொண்ட
      பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற் போல்
      வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்
      குடந்தைக் கிடந்த குடம்-ஆடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என்
      நெறி மென் குழல்மேல் சூட்டிரே



[628.0]
கஞ்சைக் காய்ந்த கருவில்லி
      கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு
      நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
      அவன் மார்வு அணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில்
      மார்விற் கொணர்ந்து புரட்டீரே



[629.0]
ஆரே உலகத்து ஆற்றுவார்?
      ஆயர்-பாடி கவர்ந்து உண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு
      தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன்
      அமுத வாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
      பருக்கி இளைப்பை நீக்கீரே



[630.0]
Back to Top
அழிலும் தொழிலும் உருக் காட்டான்
      அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுசிப் புகுந்து என்னைச்
      சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே
      நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர் கொண்டு
      குளிர முகத்துத் தடவீரே



[631.0]
நடை ஒன்று இல்லா உலகத்து
      நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால்
      குளப்புக்கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான்
      போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
      போகா உயிர் என் உடம்பையே



[632.0]
வெற்றிக் கருளக் கொடியான்தன்
      மீமீது ஆடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய்
      வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றம் அற்ற முலைதன்னைக்
      குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்றம் அவை தீர
      அணைய அமுக்கிக் கட்டீரே



[633.0]
உள்ளே உருகி நைவேனை
      உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
      கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
      கொங்கைதன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
      எறிந்து என் அழலைத் தீர்வேனே



[634.0]
கொம்மை முலைகள் இடர் தீரக்
      கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே
      இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்?
செம்மை உடைய திருமார்வில்
      சேர்த்தானேனும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
      விடைதான் தருமேல் மிக நன்றே



[635.0]
Back to Top
அல்லல் விளைத்த பெருமானை
      ஆயர்பாடிக்கு அணி-விளக்கை
வில்லி புதுவைநகர் நம்பி
      விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
      வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
      துன்பக் கடலுள் துவளாரே



[636.0]
பட்டி மேய்ந்து ஓர் காரேறு
      பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி
      இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை
      இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே



[637.0]
அனுங்க என்னைப் பிரிவு செய்து
      ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
      கோவர்த்தனனைக் கண்டீரே?
கணங்களோடு மின் மேகம்
      கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே



[638.0]
மாலாய்ப் பிறந்த நம்பியை
      மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
      இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில்காப்பான்
      வினதை-சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே



[639.0]
கார்த் தண் கமலக் கண் என்னும்
      நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
      ஈசன்தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயப்
      புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே



[640.0]
Back to Top
மாதவன் என் மணியினை
      வலையிற் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா
      ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக-ஆடை உடை தாழ
      பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே



[641.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song